Monday, June 6, 2011

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு


டேய் ,"போயி நம்ம வண்ணான் சந்துல முனியாண்டிகிட்ட நான் சொன்னேன்னு கழுதபால் வாங்கிட்டு வா "ன்னு சொன்னாள் சித்தி.கழுதபாலா எதுக்கு ,டேய் பாப்பாக்கு வேணும்டா போயி வாங்கிட்டு வா எதுக்கெடுத்தாலும் கேள்வி கேக்காத "ன்னு கோபம் காட்டினாள்.ஓட்டம் பிடித்தேன்.வாயில் பைக் சத்தத்தை கொடுத்துக்கொண்டு இடையே ஹோர்ன் அடிக்க தவறாமல் குறுகலான சந்துகளை தாண்டி ஓட்டம் பிடித்தேன்.
ஓலைகுடிசை,தரை மேல் காயப்போட்ட நீலம் போட்ட சட்டைகள் , பாவாடைகள்,சீருடைகள் என ஆங்காங்கே படர்திருந்தது.அங்கு இருந்த பனைமரத்தில் கயிறு கட்டி ஈரத்துணிகளை காயபோட்டிருந்தார்கள். ஈரத்துணிகள் சில தாங்கள் அடித்து துவைக்கபட்டதால் என்னவோ பூமியை நோக்கி கண்ணீர் விட்டு கொண்டு இருந்தது.சில பெண்கள் வரிசையாக நின்று கொண்டு ஒருவர் துவைக்க ஒருவர் அதை புளிந்து மற்றொருவரிடம் வீச அடுத்து இருப்பவர் காயப்போட மனிதர்கள் எந்திரன்களாய் மாறிபோய் இருந்தார்கள்.குட்டையின் மறுகரை மேல் ஒரு குடிசை."அண்ணே அண்ணே ,"யாரு ன்னு கேட்டு கொண்டே வெளியே வந்தான் முனியாண்டி.அதுவரை தான் பிடித்து வைத்திருந்த காத்தை வெளியே விட்டான்.அதோடு பேசவும் செய்தான்.அது புயலில் சிக்கிய வார்த்தையாய் வெளியே வந்தது."ஏலே முதல்ல மூச்ச விடு அப்புறம் பேசுட" ன்னார்.சில மணித்துளிகளுக்கு பிறகு "அண்ணே எங்க சித்தி கழுதபால் வாங்கியார சொல்லுச்சு " நீ ராஜேந்திரன் மவன்தானே" ம்” என்று பதில் சொன்னேன்.இரு வரேன் ன்னு உள்ளே போனார். நான் வெளியே வேடிக்கை பார்க்கலானேன்.வாசலில் இரு கழுதைகள் வாலை ஆட்டியவாறே அதற்கே உண்டான கர்ஜனையுடன் இரை தின்றது.டேய் ராஜேந்திரன் மவனே "இந்தாட பத்திரமா கொண்டுபோ திறந்து பாக்காதடா புழு வைச்சுடும்"ன்னும் சொன்னதும் மறுபடியும் அதே வண்டி சத்தத்துடன் வீட்டை அடைத்தேன்.இந்தாங்க சித்தி.அதை சங்கில் ஊற்றி குழந்தை அருகே சென்று எதோ செய்து கொண்டிருந்தார்கள்.நான் அதை கவனிக்க ஆரம்பித்தேன்.டேய் போய் வெளியே விளையாடுடா"ன்னு சொல்லி என்னை விரட்டினாள் சித்தி.
நான் வாசலில் உட்காந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.சில பேர் கழுதை மேல் துணிமூட்டை ஏற்றி கண்மாயிக்கு சென்று கொண்டிருந்தார்கள்.அதன் கழுத்தில் எதோ தாயித்து கட்டியிருந்தது.அது அந்த கழுதையின் சொந்தக்காரனின் பெயர் ன்னு நெனைக்கிறேன்.
டேய் செந்தில் கொஞ்சம் மசாலா பொடி எடுத்துட்டு புளியாந்தோப்புக்கு வாடா.சுக்கட்டான் (கறியை நெருப்பில் சுட்டு தின்பது) போட போறோம் ன்னு ஒரு குரல்.அது எங்க கூட்டத்துல ஒருத்தன் அவன் மாரியப்பன்.வேகமா அடுப்படிக்கு ஓடினேன்.மசாலா டப்பாவ தேடினேன்.பெருங்காய டப்பாவ எடுத்துட்டேன்.அதுல பணம்.அதுமேல் எனக்கு நாட்டம் இல்லை.அப்பாவுக்கு தெரியாம அம்மா வைத்திருக்கும் அஞ்சறைப்பெட்டி கஜானா. ஒரு வழியா மசாலாவ எடுத்துகிட்டு புளியாந்தோப்புக்கு ஓடினேன்.அங்கு பாண்டி நான்கு சிட்டுகுருவியை கயிற்றில் கட்டியிருந்தான்.அந்த நான்கும் பாண்டியின் வேட்டைக்கு பலி ஆகிருந்தது.ரெடியாக வைத்திருந்த blade ஐ எடுத்து அருக்கலானான்.டேய் நெறைய கீத்து (துண்டு) போடுடா.எல்லாருக்கும் வேணும்டா”.ன்னு வேணு சொன்னான் .எங்க கூட்டத்துல அதிகமா தின்னும் ஆசாமி அவன்தான்.ஒரு வழியா அறுத்து சுத்தம் செய்து ஒரு பக்கம் சுள்ளிகளை போட்டு மூட்டம் போட்டார்கள். “டேய் காரம் கொஞ்சம் தூக்கலா போடுடா அப்பதான் நல்லாயிருக்கும்” ன்னு சொன்னான் சமையல் சக்கரவர்த்தி.சிட்டுகுருவி சிறு சிறு துண்டுகளாக வெந்து கொண்டு இருந்தது.நான் பக்குவம் பாக்குறேன் னு சொல்லியே சில பல துண்டுகளை சாப்பிட்டான் வேணு .எந்த துண்டு தின்னாலும் அவன் சொல்லும் வார்த்தை “இன்னும் கொஞ்சம் வேகனும்” .உப்பு,மசாலா போட்டு ரெடியானது சிட்டுகுருவி 65 .சம போஜன பந்தி நடந்தது.

சில வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள்.நான் பத்தாவது படிக்க பக்கத்துக்கு ஊருக்கு போனேன்.அங்கு கணக்கு வாத்தியார் "இது கூட தெரியல முட்டகழுதை"ன்னு சொன்னார்.இவர் எதுக்கு கழுதய முட்டாள்னு சொல்றார் " ன்னு எனக்கு தோனுச்சு.அவர் திட்டியதும் கழுதை நெனப்பு வந்தது .சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் குட்டைக்கு போனேன் அங்கே ஒரு கழுதைகூட இல்ல .முனியாண்டி வீடு ,குட்டை பின்புறம் ,குப்பைதொட்டி,கிழிந்து போன சினிமா போஸ்டர் ஒட்டியிருக்கும் இடிந்துபோன சுவர் இப்படி எங்கெல்லாமோ தேடினேன் .கம்மாயில் கழுதைகளுக்கு பதிலாக வண்டியில்அழுக்கு துணிகளை ஏற்றி கொண்டு இருந்தார்கள்.எங்கே போயின இவைகள்.அது ரொம்ப சாதுவான பிராணி.அது கத்தினால் 3 கி.மீ வரை கேட்குமாம்.நான் ஊரையே சுற்றி வந்து விட்டேன்.கழுதைகளை காணவில்லை.

சரி.சிட்டுகுருவியை தேடினேன்.அதும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இப்போதெல்லாம் சுக்கட்டான் போடுவதேயில்லை. புளியாந்தோப்பும் இல்ல சிட்டுக்குருவிகளும் இல்லை.அங்கு செல்போன் டவர் வந்து விட்டது.அது முன்பு விளை நிலம் இப்போது விலை நிலம்.மரங்களுக்கு பதிலாக செல்போன் டவர் குருவிகள் இப்போதெல்லாம் கூடு கட்டுவதில்லை.

8 comments:

  1. நினைவுகள்...வார்த்தை விளையாட்டு...அருமை நண்பா..

    ReplyDelete
  2. .அது முன்பு விளை நிலம் இப்போது விலை நிலம்.

    nalla pathivu sir...

    ReplyDelete
  3. nice story anna., ஈரத்துணிகள் சில தாங்கள் அடித்து துவைக்கபட்டதால் என்னவோ பூமியை நோக்கி கண்ணீர் விட்டு கொண்டு இருந்தது cute...

    ReplyDelete
  4. Very Good one Raja.. I really missed to enjoy reading all your creation till now.. :)

    ReplyDelete
  5. Pandi...... Chinna vayathu nabagam enakku meendum vara vaithu vittai nanba

    ReplyDelete
  6. தினமும் ஒரு படைப்பு வெளியிடுங்கள்...
    கற்பனைத் திறன் அளவுகடந்துதான் இருக்கிறது உங்களிடம்..

    ReplyDelete